Monday, February 24, 2014

மழைக்கவிதை


டர்க்கி டவலில் தலைதுவட்டி
வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு
பளிங்குக் கோப்பையில்
தேநீர் உறிஞ்சிக்கொண்டே
எழுதப்படும் மழைகவிதைக்கும்

ரோட்டோரம்
ஒழுகும் பாலிதீன் கூடாரத்தில்
தலை சாய்க்க இடமின்றி, உட்கார்ந்துகொண்டு
நடுங்கும் கரங்களில், கடுஞ்சாயாவின்
கண்ணாடி குவளையை இருக்க பிடித்துக்கொண்டு
எழுதப்படும் மலைக்கவிதைக்கும்

நிறையவே வித்தியாசம் இருந்தது.

ஒரே வானம் தான்.
ஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.

o

சாலையில் தேங்கி நின்ற
மழை நீரில் விளையாடிய குழந்தை
முதுகில் அடி வாங்கி வீட்டுக்குள் விடப்பட்டது.
பூட்டிய வீட்டின் கண்ணாடி சன்னல்வழி
விளையாடும் தன் நண்பர்களை பார்க்கிறது.

வெளியே இருந்த குழந்தையின் மழைக்கும்
உள்ளே அடைபட்ட குழந்தையின் மழைக்கும்

நிறையவே வித்தியாசம் இருந்தது.

ஒரே வானம் தான்.
ஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.

o

சிலருக்கு சிரிப்பாய். சிலருக்கு அழுகையாய்.

என்னையும், அந்த மழையையும்
எல்லோராலும் வெறுக்கவும் முடியாது.
எல்லோராலும் ரசிக்கவும் முடியாது. - காதலிக்கப்படாதவன்

Friday, February 21, 2014

என்னை அழவைத்தவளுக்கு


உடைப்பதாயிருந்தால்
தாரளமாக உடை என் இருதயத்தை.
இன்னொருத்தி வந்தால்
நுழைய வசதியாக இருக்கும்.

வேண்டாமென்றால்
பத்திரமாய் திருப்பிக்கொடு
கடிதம் மட்டுமல்ல, என் இருதயத்தையும்.
வேறு யாருக்காவது பயன்படும்.

தூக்கி எறிவதாய் இருந்தால்
நீ இல்லாத கிரகத்தில் எறி.
வேறு யாரையாவது
காதலிக்க பழகவேண்டும் நான்.

போவதாய் இருந்தால்
தாரளாமாய், உடனே போ.
ஆனால் என்னிலிருக்கும் உன்னை
மொத்தமாய் எடுத்துப் போ.

என்னிலிருக்கும் உன்னை
முழுதாய் பிரிக்க முடியாத வரை…
என்னை எங்கு தூக்கி வீசினும்,
நீ இல்லாமல் இருக்கப்போவதில்லை என்னுடன்.
என்றும் என்னுள் நுழையும் உரிமைகொண்ட
அந்த இன்னொருத்தி நீ மட்டும் தான்.

அதுவரை
திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை.
என் இருதயத்தை.

காயம் செய்.காதல் செய்.

என்ன தான் அழவைத்தாலும்
நான் விரும்பி அழுவதற்கு
நீ என் அம்மாவாய் இருக்க வேண்டும்.
இல்லை என் காதலாய் இருக்க வேண்டும்.

நீ என்னை அழவைத்தவள்.
நீயே என்னை அன்பால் அள்ளி அணைத்துக் கொண்டவள். - காதலிக்கப்படாதவன்

Friday, February 14, 2014

ஒரு இளவரசியின் கதை

டெட்டி பியர் இல்லாமல்
உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தவளை
மார்போடு அணைக்கும் அந்த அரவணைப்பில்,

இரவுகளின் முடிச்சுகளை அவிழ்த்து
இளவரசியின் மந்திர தூக்கம் கலைக்கும்
அந்த இளவரசனின் முத்தத்தில்,

சமைக்கும் ஆசையில்
வெண்டைக்காயென விரலை நறுக்கிக்கொண்டவளை
சமையலறைக்குள் நுழைய விடாமல்
முறுகலாய் கருகி போன அவன் தோசையில்

கோபித்துக்கொண்டதாய் நான் நடிக்கிற பொழுதுகளில்
கண்டுகொள்ளாததாய் நடிக்கிற அவனின் குறும்புகளிடம்
தோற்றுப்போகும் ஊடலின் தோல்வியில்

அவனிடமே சண்டை போட்டு
அவனையே கட்டி உறங்கும் அந்த பொழுதுகளில்

மொட்டை மாடி நிலா மழை,
காற்றுக்கும் அனுமதியில்லாத
அவனுடனான தனிமையினில்

என் ஒவ்வொரு மாதிரியான
"ம்"-க்கும் இருக்கும் அர்த்தத்தை
சரியாய் புரிந்துகொள்ளும் அவன்

கருத்துக்கள் வேறுபடும்போது
கோபித்துக்கொள்பவன் பின்னால்
மிட்டாய் வண்டிபின் போகும் பிள்ளையாய்
ஓடும் நான்

இன்னமும் இன்னமும் காதல்.

கூண்டுக்குள் அடைத்துவிட்டு
பூனையை காவல் வைத்ததாய் நினைத்துவிட்டார்கள்
பூனையும் பழகிக்கொண்டது
என்னோடு வான் பறக்க

இளவரசியாக வளர்க்கப்பட்டவள் நான்.
இளவரசியாகவே வாழ விடுகிறான் அவன். - காதலிக்கப்படாதவன்

Wednesday, February 12, 2014

மொத்தமும் காதல்

அவளும் காதலை
ஏற்றுக்கொண்ட தருணத்தில்
கனவா? நிஜமா? குழம்பி நின்றவனிடம்
கன்னத்தைக் காட்டி
கிள்ளிப்பார்த்துக்கொள்ள சொன்னாள்.

அந்த கன்னத்தை கிள்ள ஆசையில்லை.
முத்தமிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

o

முத்தமிட்டுக்கொண்டிருந்த
என் இதழிடமிருந்து அவள் இதழ் பிரித்து,
மூச்சு வாங்கிக்கொண்டவள்
கல்யாணத்திற்கு பிறகு வேண்டுமென
முத்தங்களை மிச்சம் வைக்க சொன்னாள்.
நான் மீண்டும்
அவள் இதழ் சேர்த்துக்கொண்டேன்.

தீர்ந்து போக,
முத்தங்கள் காமம் இல்லை. காதல்.

o

முத்தமென்பது ஒரு கடன்.
திருப்பி கொடுக்கவென போய்,
மீண்டும் கடன்பட்டு திருப்புகிறேன்.

o

எங்களுக்குள் பிரச்சனையே
வருவதில்லை.
பேசினால் தானே பிரச்சனை வரும். - காதலிக்கப்படாதவன்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்