Thursday, August 30, 2012

makeup போட்ட மலரே


இரண்டு விழியாலே
அள்ளி மென்றாளே
அழகாலே விழியுள்ளே
கிள்ளி வைத்தாளே
இதய  சுவரெல்லாம்
பரண்டி போனாளே
லப்டப் மறந்து அவள்  பெயரை
என் இருதயம் புலம்ப செய்தாளே

-oOo-

make up போட்ட மலரவள் பார்வை
என் single என்னும்
டுலெட் போர்டை 
தூர எறிந்ததே
என் பெயர்தான்
அவள் பெயரிருக்கும்
என் மாமன் பெயருக்கு
நாளை ஓய்வு தருமே...

-oOo-

சூரியன் உதித்தல்ல,
என் நாட்கள்...அவள்
மின்கடித்ததில் விடியுதே
சொல்லாத என் காதல்
தொண்டைக்குள்ளே
தினம்  மடியுதே...

-oOo-
 
சொல்லாமல் மெல்லாமல்
என் காதல், குரவளையில்
முள்ளாய் குத்துதே
நெஞ்சுள்ளே கட்டெறும்பாய்
உசுரை கடித்து குதறுதே

-oOo-

அவள்  பதில் வர தாமதித்தால்
நான்  படும்பாட்டை
refresh பொத்தான் மட்டுமே அறியும்
காதல் சொல்லி மறுத்திடுவாளோ
தாங்கும் இருதயம் இல்லை
எனக்கு  மட்டுமே தெரியும்

-oOo-

இருந்தும்
அனுப்பாத கடிதங்களை
நீ படித்தும் புரியாத கவிதைகளை
பத்திரப்படுத்திக் கொள்வேன்

பொம்மை  கேட்டு வாங்கி தர
மறுக்கும் உன்னிடம்
கோபித்து சாப்பிடாத நம் மகளை
உன்  பிடிவாதமீது  நான் கொண்ட
பயம்  சொல்லி சந்தபடுத்த தேவைபடுமடி...

பின்குறிப்பு - அவளிடம் சொல்ல தைரியமில்லாத ஒரு காதல் ... நிச்சயமாய் ஒரு தலை காதலில்லை[அவ்வளவு நம்பிக்கை]

Monday, August 27, 2012

மாறிப்போன அர்த்தம்

புகையும் குடியும் கேடு...
அவன் எந்த கேட்ட பழக்கம்
இல்லாத நல்லவன் என்றான்...

அவனோ  அடுத்த தெருவுக்கு
பூமியை மாசக்கி பைக்கில் போனான்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

எந்த பொண்ணையும் அவன்
ஏறெடுத்து பார்த்ததில்லை
நல்லவன் என்றான் 

அவன் பார்ப்பதெல்லாம்
ஏறெடுத்து பார்க்கும் உயரத்தில்
இல்லை என்பதை யாரறிந்தார்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

அரசியல் - அனாவசியம் பேசி
நேரம்  வீணடிக்க மாட்டான்
நல்லவன் அவன் என்றான்

அரங்கேறும் அவலங்களுக்கு
பின்னால் அவன் போடாத
ஒரு ஓட்டும் இருந்தது

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

... o ...

இருக்கும் இடம் தெரியாது
குனிந்த தலை நிமிராது
ரொம்ப நல்ல பொண்ணு அவ என்றான்

அதெல்லாம் படிதாண்டி
தெரு கடக்கும் வரை மட்டும்தான்
என்று தெரியாமல்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

அப்பாட்ட காசுக்கு நின்னதில்ல
வீணாக போனுக்கு ரீச்சார்சு பண்ணினதில்ல
ரொம்ப நல்ல பொண்ணு அவ என்றான்

அதுக்கெல்லாம் சேர்த்து
ஒரு லூசு அவங்க அப்பா பையில்
கைவைப்பது தெரியாமல்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

என் சொல்பேச்சு கேப்பா
நல்ல மருமக என்றா

இடுப்பு கொத்து சாவி
இவா இடுப்பு வரும் வரைதான் அது
என்று தெரியாத மாமியா

என்ன மகா மாதிரி பாத்துக்கிட்டா
நல்ல மாமியா என்றா

இவா போட்டு வந்த நூறு பவுனின்
போதை தீரும் வரைதான் அது
என்று தெரியாத மருமக

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது

...

முட்டாள்களின் தேசத்தில்
அறிவாளி  முட்டாளாகவே பார்க்கப்படுவான்

இன்றெல்லாம்  நல்லவர்
என்பதற்கு அர்த்தம் மாறிவிட்டது


கவிஞனின் கொசுக்கடி

முத்த முள்ளாலே
நித்தம்  கொன்றாளே
மொத்த தூக்கத்தை
கடத்தி சென்றாளே...

இரவு  மட்டும் வந்து
இதயம் மட்டுமல்ல
உடல்கள் முழுதும் குடிபுகுந்தாலே
இமை மூடாத
வசியம் செய்தாலே

good night குறுஞ்செய்தியை
புகையாக  அனுப்பியும்
அவள் உறங்கவே இல்லை
எப்படி நுழைந்தாள்
என் வீட்டினுள் விளங்கவே இல்லை

சொல்லாத  இடமெல்லாம்
கைவரிசை காண்பித்தாள்
முத்தத்தின் தலும்பாலே
முத்திரைதான் பதித்தாள்

அவள் காதலை
என் ரத்தத்தில் கலந்தாள்
பெயரறியா நோயிலே
நானும் தான் விழுந்தேன்...

...

ஆவலுடன் களவி முடித்த நான்
சலித்துப் போகையில்

அவள் ரத்தத்தால்
அவள்  கல்லறையில் எழுதுகிறேன்...
என்னை  உறங்கவிடாத காதல்
இங்கே உறங்கி கொண்டிருகிறதென

காதலி வதைத்தால் மட்டுமல்ல
ஒரு கவிஞனை கொசுக்கடித்தாலும்
கவிதையாகும்







Friday, August 24, 2012

ஏ(ன்)மாற்றம்?





டாஸ்மாக்கின் கல்லா காசுகள்
பாதி சொல்லிய காரணம்...
ஏமாற்றிய காதலென்று

தற்கொலை பாறைகளில்
விழுந்தவரின் எதிரொலி
விஷம் கொண்டவர் சொல்லாமல்
முழுங்கிய வார்த்தைகள்
தூக்குக் கயிறில் நெரிக்கப்பட்டு
கொலையுண்ட வேதனை
என்று எல்லாம் சொல்வதுவும்...
ஏமாற்றியதாய் காதலைத்தான்

சிரைக்கப்படாத தாடிகள்
சிதைக்கப்படும் மணிக்கட்டுகள்
வீசப்படும் அமிலங்கள்
எல்லாம் குற்றம் சொல்வதுவும்
ஏமாற்றியதாய்  காதலைத்தான்

காய்ந்து போன மாடே
பசும்புல் பசிக்கண்ணாலே
வைக்கோல் பார்த்த அவசரத்தில்
மேய்ந்து தொலைத்தாய்...
புல்லின் ருசி காணாமலே
நீயே உன்னை ஏமாற்றியது தெரிகிறது
உன் கல்லிருதயத்தில் வேர்விட்ட
ஆசை செடி வெளிவரவோ மறுக்கிறது...

அடுக்கடுக்காய் குற்றமெல்லாம்
உன்புறமென புரிகையிலே
ஏமாந்த நீ ஏமாற்றியது காதலென்று புலம்புகிறாய்...

நீ ஏமாந்தது உண்மைதான்
அனால் ஏமாற்றியது காதலல்ல
காதலை குற்றவாளியாக்கும்
உன்னை பெற்றெடுத்தது மட்டும் தான்
காதல் செய்த குற்றம்...
உலகிற்கு அது கொடுத்த ஏமாற்றம்

Wednesday, August 22, 2012

யார் அந்த பைத்தியம்


பைத்தியக்காரர்கள்  எப்போதும்
சட்டையை கிழித்துக்கொண்டும்
தனிமையில் சிரித்துக்கொண்டும்தான்
இருப்பார்களா என்ன?
சடைபிடித்த முடியும்
சிரைக்கப்படாத தாடியும்
அழுக்கடைந்த நகமும்
வீச்சம் எடுக்கும் தேகத்துடந்தான்
இருப்பார்களா என்ன?

கிளிக்கப்படாத ஆடையில்
தான் இருந்தார்கள் ...
சுற்றத்துடன் இருந்தும்
சிரிக்கத் தெரியாதவராய்
தான் இருந்தார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சிலநேரம் உதடுகளால்
மட்டும் சிரித்தாலும்
உள்ளுக்குள் சிடுசிடுத்து
தான் கிடந்தார்கள்...
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

கையொப்பம் இடு என்றால்
கணினியில் தட்டச்சும்
புத்திசாலியாக இருந்தார்கள்
மகன் படிக்கும் வகுப்பு
மறந்தவர்களாய் இருந்தார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

நண்பர்களை சந்திக்கையில்
வீட்டின் விலை வேலை
பற்றி பேசினார்கள்
அப்பரைசல் மேனேசரை திட்டினார்கள்
நட்பை மட்டும்
மறந்தவர்களாய் இருந்தார்கள்...
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சொந்தங்கள் சந்திக்கையிலும்
பட்டு சரிகையின் அகலம்
புதுசாய் வாங்கிய காரு என்று
பகட்டை மட்டுமே பேசினார்கள்
தன்னை தானே
ஏமாற்றிக் கொண்டார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

சினிமாக்கள் போல் தங்கள்
காதலையும் கற்பனை செய்தார்கள்
கிடைத்த சுவை போதாமல்
கிடைக்காததை நினைத்து
வாழ்க்கையை கசப்பாக்கி கொண்டார்கள்
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

இதோ இதை
எழுதிய படித்த
எதோ ஒருவராக இருந்தார்கள்
எல்லோராகவோ எதோ ஒருவராக  
நான் பார்த்த பைத்தியக்காரர்கள்

Thursday, August 16, 2012

நீ... நான்... நாம்...

வீதி எங்கும்
தர்மத்தின் பிணங்கள்
தேசம் தோறும்
நீதி கற்பழிக்கபட்டிருந்தது
வீடு தோறும்
எதிர்காலம் அழுது ஓலமிட்டது
.
ஓசையின்றி எல்லாம்
நடந்துகொண்டே இருந்தது
நடத்தியவர் யார்?
 .
தேடிய எல்லோர் இடுப்பிலும்
உலர்ந்த ரத்தக் கறையுடன்
ஒரு கத்தி மறைக்கப்பட்டிருந்தது
செத்த எந்த தர்மத்தினுடையதோ அது?
 .
பாதி பேர் முகத்தில் முதுகில்
பிரண்டப்பட்ட நகத்தின் தழும்புகள்
கற்பழிக்கப்பட்ட எந்த நீதியின்
தப்பிக்கும் முயற்சியின் தோல்வியோ அது?
.
எதோ ஒரு கொலைக்கு
செய்ய சொல்பவனையும்
செய்து முடிப்பவனையும் தவிர
மீதமுள்ளவரும் காரணமாய் இருப்பதால்
எல்லோர் கரங்களிலும் ரத்தக் கறை
 .
இறங்கிவந்த அவதாரப் புருஷன் அவன்
இருந்தும் அவன் சட்டைப் பையில் இருக்கும்
பத்தில் எட்டு நோட்டுகள் கருப்பாய் இருந்தது
.
பசி ஆற்ற மட்டும் அல்லாமல்
பகட்டும் காட்டி இறங்கிடும்
என் பாதிவேளை உணவுகள்
களவாடப்பட்டதாகவே இருந்தது
சில நேரம் இலைகளில்
சிலநேரம் செரித்த மலங்களில்
 .
அன்பின் அரண்மனை
என்று இன்று நீ பிதற்றுவது
நேற்று ஒரு கொலையின்
களமாய் இருந்திருக்கலாம்
தெய்வம் வாழும் கோவிலென்பது  
மனிதம் எறிந்த சுடுகாடாய் இருந்திருக்கலாம்
.
தட்டிக் கேட்க்கும் முன் என்னை பார்த்தேன்
என் கைகளிலும் ரத்தக் கறை
என் முதுகிலும் நகத்தின் தழும்பு
என் பைகளிலும் கருப்பு நோட்டுகள்
எந்தன் இடுப்பிலும் ஒரு கத்தி ரத்தக் கரையுடன்
என் வீட்டிலும் எறிந்த பிணவாடை
என் உணவெல்லாம் ஒருவரின் பசி வாடை
 .
ஊரோடு ஒத்து வாழ வேண்டுமல்லவா?
களவாடப்பட்டதை உண்டு
கத்தியை கூர் தீட்டி
இடுப்பில் மாட்டிக்கொண்டு
மீண்டும் தொடர்ந்தேன் மறு நாளை
 .
எவனோ செய்கிறான்
எவனோ துடிக்கிறான்
என்னை தீண்டாத வரை
அடுத்தவனை கொள்ளும் பாம்பை
அடிப்பதும் பாவம் இந்த தேசத்தில்
 .
பெருமைபடுகிறேன் மாபெரும் தேசத்தின்
குடிமகன் என்பதில் ...
இத்தனை இருந்தும் 66  ஆண்டுகள்
காப்பாற்றிவிட்டதல்லவா 
ஆங்கிலையன் விட்டுசென்ற சுதந்திரத்தை
 .
காந்தி சிரித்துக்கொண்டே களவாகட்டும்
ராமன்கள் எல்லாம் ராவணாகட்டும்
கண்ணகி தேசத்தில் கற்பு விலையாகட்டும்
டெஸ்ட்டுபில் விளைந்து பசி தீரட்டும்
66  ... 6000 ஆனாலும் தேசம் வல்லரசை நோக்கி
என்று பொய் உரைக்கட்டும்
தேசம் நாசமாய் போகட்டும்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

Sunday, August 12, 2012

பண மரம்

இருபத்தியோராம் நூற்றண்டின் மகாத்மாக்களே...
நீங்கள் உழல்களில் காட்டி
செய்தி தாள்களை நிரப்பும்
செய்த்திகளில் மட்டுமே நாங்கள்
கோடிகளை பார்த்ததுண்டு...

அந்த கோடிகள் எதுவென்று தெரியுமா?

அதோ டிஜிட்டல் போர்டு போக
வெள்ளை போர்டுக்காய் நிற்கும்
மீன்காரியின் காலில் கடுக்கும் வழி அது...

அன்லிமிடெடிலும் அடங்காதது
ஐந்து ரூபாய்க்கு கணக்கு பார்த்து
லிமிட்டெடு மீல்சிலே
அமைத்தியாகிப் போன கூலியின் பசி அது...

அங்கே சேர்த்தால் கற்றையாய்
டொனேசன் வேண்டும் ...
யூனிபார்ம்க்கு தொடங்கி புஸ்தகம் வர
எவ்வளவோ வேண்டும் என்று
கார்பரேசன் பள்ளிக்குள் சிறை வைக்கப்பட்ட
செருப்புத் தொழிலாளி மகனின் கனவு அது...

இந்த கடையில்
எழுபத்தி நாலு ரூபாய் ஐம்பது காசு
அந்த கடையில்
எழுபத்தி நாலு ரூபாய் இருபத்தி ஐந்து காசு
என்று கணக்கு பார்த்ததின் மிச்சம் அது...

பொண்ணு ஆளாயிட்ட
புகுந்த வீடு போட்டு போக
சீரு செக்க துப்பிருக்க என்று
மனைவின் கேள்வி நாக்கை புடுங்க
பொறுப்பு வந்து தூக்கிபோட்ட குடிப்பழக்கமது...

ஐம்பது  பவுணு போட்டு
தங்கச்சிக்கு கல்யாணம்...
பேரனோடு விளையாடி ஓய்ந்த
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
அமைதியான காசி பயணம்...
குடுவாஞ்சேரியே ஆனாலும்
சென்னைக்கு மிக அருகில் அன்பான வீடு
என்ற நடுத்தர வாசிகளின் வாழ்க்கை அது...

நாங்கள் கணக்குகளில் கூட
கண்டிராத  கோடிகளை
நீங்கள் உழலிலும் வழக்கிலும்
பார்க்கவா தினம் எங்கள் ஓட்டம்...

நாங்கள் பணம் காய்க்கும் மரமல்ல
ஆனால் இனி அசையாமல் நான் இருக்கும் வரை
உங்கள் வீட்டில் கதவு சன்னலில் இருக்கும்
செத்த மரங்களும் பணம் காய்க்கும்
எங்கள்  உழைப்பில் வேர் பாய்ச்சி எம் உயிர் உறிஞ்சி...

Saturday, August 11, 2012

முகங்களின் புத்தகத்தில்

உனக்கு  நிறைய
படிக்க  கொடுத்து உன்னிடம்
நிறைய படித்துக் கொள்ளும் உலகம் இது...

0#0#0#0#0#0


அந்த வெள்ளை சல்வாரில்
இந்த பச்சை பட்டில்
செல்லக் குழந்தையோடு
என்று எல்லா புகைப் படங்களிலும் அவள்
தேவதையாகவே தெரிந்தாள்...

இதை அவளிடம் சொல்லி  இருந்தால்
பார்த்திருக்கலாம் 
அவளுள்ளிருக்கும் அரக்கியோ!
இல்லை  அவளுக்கு காவலிருக்கும் அரக்கனோ

0#0#0#0#0#0

இந்த புத்தகத்தின் இடுக்குகளில்
தங்கள் காதல் மயிலிறகை
பொத்தி பொத்தி வைத்து
அது போடும் குட்டிக்கு காத்திருக்கும் பலர்...

0#0#0#0#0#0

காமம் களவு விஷம் வேஷம்
என்று தனக்குள் இருக்கும்
போலி முகங்களை
பலர் கட்டவிழ்த்துவிடும் இடம்...

0#0#0#0#0#0
குப்பையை தெருவில் 
போடுபவன்... மாசு பற்றி 
ஒரு தேசம் அழிய 
பார்த்தவன்... அதிகாரவர்க்கம் பற்றி 
ஓட்டு போடாதவன் 
ஓட்டை அரசியல் பற்றி 
மின்சாரத்தை  வீணடித்தவன் 
மின்வெட்டு பற்றி என்று

எதோ ஒன்றிரண்டை பகிர்ந்து
தம்  கடமை முடித்துக்கொள்ளும் உலகம்...

0#0#0#0#0#0

இது ஒரு கனவு...
உனக்கு தேவையானதை 
நீ தேர்ந்தெடுக்கலாம்...
பிடித்தவர்களை மட்டும் 
உள்  அனுமதிக்கலாம்...
பலிக்கவும் செய்யலாம் 
பாழக்கவும்  செய்யலாம்...
0#0#0#0#0#0

நீ  என்ன சொன்னாலும் 
கேட்டுக்கொள்ளும்
உன் வார இறுதியை செலவில்லாமல் 
நகர்த்தி செல்லும் 
உன் செல்லக் காதலி இவள்...

0#0#0#0#0#0

இது நாமே நமக்காய்
உருவாக்கிய சுவர்க்கம்...

சிலர் நரகமாக்காதவரை...

பி.கு. - முகப்புத்தாக கலாச்சாரத்தில் என்னை ஈர்த்தவை என் எழுத்தில் 

Sunday, August 5, 2012

பாதை நீளமானது

அந்த பாதை மிக நீளமானது...
என்னோடு பலர் நடந்து கடந்து சென்றனர்...

முகம்தேரியாதவர் தான்
பழக்கமாகினர்...
தீடிரென்று கண் மறைந்தனர்...
நான் கவலையின்றி தொடர்ந்து நடந்தேன்...

சிலர் எனக்கு
வழி சொல்வதாய் சொன்னார்கள்
சிலர் என்னிடம்
வழி கேட்டு தொடர்ந்தார்கள்...

எங்களோடு  வந்தவர் சிலர்
திடிரென்று பிணமாய் சாய்ந்தார்கள்...
நாங்கள் நிற்கவே  இல்லை
கண்ணீரை அவர்களின் துணைக்கு விட்டுவிட்டு
தொடர்ந்து நடந்தோம்...

ஒரு நேரம் கூட்டத்தில் நடந்தேன்

 என்னோடு நடந்தவருக்கு
என் துணை கசந்து அழுத்துப் போகையில்
எனை பிரிந்து இன்னொருவரோடு சேர்ந்து
நடந்தனர் நாளை அதுவும் கசக்குமென்பதை மறந்து

சில நேரம் தனிமையில் கிடந்தேன்...

ஏதாவது என்னால் ஆகுமென்கையில்
என்னை சேர்த்து நடந்தார்கள்
அவர்களின் தேவை தீர்ந்து போகையில்
தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து நடந்தார்கள்

மீண்டும்  எழுந்து நடந்தேன்...

வழியில்  கண்டேடுத்தவைகளை
கூவி விற்றுக்கொண்டிருந்தான்...
தேவையை வாங்கியவர்
சுகமாய் நடந்தனர்...
தேவைக்கதிகமாய் வாங்கியவர்
சுமையோடு நடந்தனர்...

கண்ணில் பட்டதெல்லாம்
தன் சொந்தம் என்று
சுமை ஏற்றிக் கொண்டார் சிலர்...
நான் வெறும் கையோடே நடை தொடர்ந்தேன்

இரண்டு நாட்கள் போதாது
தெரிந்தும் வார இறுதியைகாட்டியே
ஐந்து நாட்களை ஓட்டும் ஒரு வாழ்க்கை போல
இது அது என்று எதையோ சொல்லி
தொடர்ந்து நடந்தேன்...
இந்த  பாதை மிக நீளமானது...

பி.கு. - இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்


Friday, August 3, 2012

ஈகை


அடுத்தவர் பெயர் கொண்ட அரிசி
பசித்தவர் பசி போக்கும் ஈகை

அவன் கண்ணில் தெரிந்த பசியை
இவன் உணர்த்தத்தான் விழைவு
கருணை விழும் இதன் பாத்திரத்தில்...ஈகை

அவள் முன்னாள் இவனிடம்
இவர் கேட்டுவிட்ட அதிர்ஷ்டம்
என்றுமே சில்லறை இல்லாத பையில்
இன்று பத்துரூபாய் இருக்கும்...ஈகை

பசி துளைக்க
உடல் உழைக்க வலிக்கையில்
இதை நீட்டி பிழைக்கும் சிறு(ல) உயிர்கள்...ஈகை

வரி சலுகையின் உதவியால்
உதவிக்கரங்களும் நிறையுது
வெளுத்து போன கருப்பு பணங்களால்...ஈகை

திருவிழாவில் தொலைந்து
முதலாளியின் பீடி சூடுக்கு பயந்து
சிக்னலில் கார்களின் கதவு தட்டும் ஈகை

தாவரங்கள் செய்த ஈகை
உன் தட்டில் உணவாய்
உன் மரணத்தால் உன் உடல்
நாளை செய்யும் ஈகை
ஆறடிக்கு உரமாய்
நடுவில் நீ செய்த ஈகை
உன் பிள்ளைக்கு புண்ணியமாய்
முடிவில் நீ செய்யும் ஈகை
இன்னொருத்தருக்கு கண்ணாய், உயிராய்

பாத்திரம் அறிந்து செய்வதல்ல
நீ செய்வது அந்த பாத்திரத்திற்கு தானா
அந்த பாத்திரம் பலனடைந்ததா 
என அறிந்து ஈகை செய்... நீயும் கடவுள்

Thursday, August 2, 2012

உனக்காய்

ராமனின் பாதகை கொண்டே
அயோத்தியை ஆண்ட பரதனின் தேசத்தில்
பாக பிரிவினைகள் சகோதரத்துவத்தை
பிளந்து போடுகிறது...
.
சிகாகோவில் உலகிற்கே
சகோதரத்துவத்தை சொல்லி கைதட்டு வாங்கையிலே
அவன் தேசத்தில் அது
பணம் ஆசை கோபம் என்னும் பெயரில்
கொலை செய்யப்படுகிறது...
.
சகோதர பந்தம் போடா வேண்டிய
ரக்ஷை கயிறுகளால்
காதல் சொல்லி வருபவனை
கட்டி போடும் ஒரு கலாச்சார சிதைவு...
.
அன்பு மட்டும் எப்படிதின்றாலும்
எவ்வளவு தின்றாலும் திகட்டாதது
அனால் நீங்கள் மட்டும் தின்றால்
வயிறு வலிக்கும் பகிர்ந்து உண்போம்
இந்த சகோதரத்துவம் வழி
.
கடவுள் கொடுக்க மறந்த உறவை  
வாழ்க்கை நமக்கு கொடுத்திருகிறது
.
அனைவருக்கும் சகோதர தின நல்வாழ்த்துக்கள்






குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்